தமிழ்நாடு

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

Veeramani

தமிழகத்தில் மதுரை, ஈரோடு, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பரவலாக கனமழை பெய்துள்ளது. இந்த நிலையில் 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன்  சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதேபோல் மாட்டுத்தாவணி, கோரிப்பாளையம், சிம்மக்கல், தமுக்கம், கே.கே.நகர், உள்ளிட்ட மதுரை நகரின் பல இடங்களிலும் மழை பெய்தது

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் 2வது நாளாக கன மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி, அரேப்பாளையம், ஆசனூர் மழைப்பகுதியில் பெய்த மழையால் ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி முதல் தரங்கம்பாடி வரை மூன்றாவது நாளாக இடி,மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. சீர்காழி நகரின் பல பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. பழைய பேருந்து நிலையம்,மணிக்கூண்டு சாலை,திருமுல்லைவாசல் சாலை என முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேட்டுப்பட்டி, திருக்கட்டளை, திருக்கோகர்ணம், இச்சடி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. திருத்தணியில் கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று  ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது