சபாநாயகர் அப்பாவு கோப்பு புகைப்படம்
தமிழ்நாடு

அதிமுக தொடர்ந்த அவதூறு வழக்கு – சிறப்பு நீதிமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜர்

webteam

செய்தியாளர்: V.M.சுப்பையா

சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, “ஜெயலலிதா மரணமடைந்த நேரத்தில் 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்தனர். அதை திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்க மறுத்து விட்டார்” எனக் கூறியிருந்தார். இது அதிமுக எம்எல்ஏக்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி சபாநாயகர் அப்பாவு-வுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் அவதூறு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

EPS

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜரானார். அப்போது அவர், “நீதிமன்ற சம்மனை நான் பெற மறுத்து விட்டதாக கூறியது தவறு. உண்மையில் எனக்கு நீதிமன்ற சம்மன் ஏதும் வரவில்லை. நீதிமன்றத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் உள்ளது. இதுசம்பந்தமாக விசாரிக்க வேண்டும்” என நீதிபதியிடம் தெரிவித்தார்.

இதை கேட்ட பின்னர், வழக்கின் விசாரணையை செப்டம்பர் 26ம் தேதிக்கு நீதிபதி ஜெயவேல் தள்ளிவைத்தார். இதைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு, “சென்னையில் இருந்த போதும் சரி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சொந்த கிராமத்தில் இருந்த போதும் எனக்கு எந்த சம்மனும் வரவில்லை. சென்னையில் உள்ள வீட்டில் இருந்த காவலர்களிடம் கடிதங்கள் வந்தால் தெரிவிக்கும்படி கூறியிருந்தேன்” என தெரிவித்தார்.