தமிழ்நாடு

மீனவர்களை மீட்டுதர போராட்டம் நடத்திய 15,000 பேர் மீது வழக்குப்பதிவு

webteam

ஓகி புயலால் காணாமல் போனவர்களை மீட்டு வர துரித நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்திய கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் சுமார் 15 ஆயிரம் பேர் மீது தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

கடந்த 7 ஆம் தேதி கடலோர பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள், தூத்தூர், சின்னத்துரை கிராமங்களில் இருந்து ஊர்வலமாக சென்று குழித்துறையில் ரயிலை மறித்து 12 மணி நேரம் போராட்டம் நடத்தினர். ஓகி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர். மீனவப் பிரதிநிதிகளை முதலமைச்சர் சந்திக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தப் போராட்டத்தினால் ரயில் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக காவல்துறை சுமார் 15 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. ஊர்வலமாக சென்ற கிராமங்களில் இருக்கும் 6 காவல் நிலையங்களில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதல் தகவல் அறிக்கையில் 240 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதேபோல், ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்திய 3,500 பேர் மீது மத்திய ரயில்வே போலீசாரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.