குரங்கம்மை முகநூல்
தமிழ்நாடு

பரவும் குரங்கம்மை.... எச்சரிக்கை வெளியிட்ட தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை!

PT WEB

ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மை வேகமாக பரவிய நிலையில், சுவீடன் நாட்டிலும் குரங்கம்மை உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே அதன் பரவலையொட்டி உலக சுகாதார நிறுவனம், அவசர நிலையை அறிவித்துள்ளது. இதனையொட்டி தமிழக பொதுசுகாதாரத்துறை, மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும், தமிழ்நாட்டிலுள்ள விமான நிலையங்களின் சுகாதார அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

குரங்கு அம்மை

அதில், “குரங்கம்மை பாதிப்புள்ளவர்கள் என யார் மீதாவது சந்தேகமிருந்தால், உடனடியாக தெரிவிக்க வேண்டும். மேலும், அதிகாரிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக, காங்கோ மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும் வருபவர்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பயணிகளுக்கு வெப்ப நிலை பரிசோதனை மேற்கொள்ளவேண்டும்.

கடந்த 21 நாட்களுக்குள் குரங்கம்மை பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வந்தவர்களை கண்டறியவும். குரங்கம்மை அறிகுறிகள் இருப்பவர்களை மருத்துவமனைகளுக்கு பரிந்துரைப்பதற்காக ஏற்பாடுகளை வலுப்படுத்தவும்.

அதேபோல் யாருக்காவது பாதிப்பு கண்டறியப்பட்டால், அதுகுறித்து அவர் பயணித்த விமான நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும். அந்த விமான நிறுவனம் தொற்று பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.