தமிழ்நாடு

அத்திக்கடவு-அவிநாசி திட்டம்: ஒப்புதலுடன் நிதி ஒதுக்கியது தமிழக அரசு!

webteam

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு தமிழக அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கியதுடன் ரூ.1,652 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

மழைக்காலங்களில் பவானி ஆற்றில் அதிகப்படியான நீர் உபரியாக வீணாகிறது. இதைக்கொண்டு திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களின் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளில் ஏரி, குளம் ஆகியவற்றை தண்ணீரால் நிரப்பும் திட்டமாக அத்திக்கடவு - அவிநாசி திட்டம் உள்ளது. 

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இத்திட்டம் பல்வேறு போராட்டங்களுக்குப் பின் அரசாணையில் வெளியிடப்பட்டது. இதன்மூலம் 30 பொதுப்பணித்துறை குளங்கள், 41 ஊராட்சி ஒன்றிய குளங்கள், 700க்கும் மேற்பட்ட நீர் தேக்கங்களுக்கு தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என நடப்பு ஆண்டு தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு தமிழக அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது. அத்துடன் ரூ.1,652 கோடி நிதியையும் ஒதுக்கியுள்ளது.