தமிழ்நாடு

முத்துக்கிருஷ்ணன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம்: முதலமைச்சர் நிதியுதவி

webteam

ஜேஎன்யு மாணவர் முத்துக்கிருஷ்ணன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சேலத்தைச் சேர்ந்த ஜேஎன்யு மாணவர் முத்துக்கிருஷ்ணன் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். தூக்கிட்டு இறந்த நிலையில் மீட்கப்பட்ட அவரது மரணம் தற்கொலை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை எனவும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் முத்துக்கிருஷ்ணனின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் ஜேஎன்யு மாணவர் முத்துக்கிருஷ்ணன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் மரணமடைந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மாணவர் முத்துக்கிருஷ்ணன் உடலை டெல்லியிலிருந்து சொந்த ஊர் கொண்டு வர அரசு தேவையான உதவிகளைச் செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார்.