தமிழக மீனவர்கள் புதிய தலைமுறை
தமிழ்நாடு

கப்பலால் மோதிய இலங்கை கடற்படை; உயிர்போகும் நிலையில் இருந்து தப்பி வந்ததாக மீனவர்கள் குமுறல்!

தமிழக மீனவர்கள் படகு மீது கப்பலால் மோதிய இலங்கை கடற்படை அதிகாரிகள் மீது வேதாரண்யம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

PT WEB

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செருதூர் கிராமத்தை சேர்ந்த 4 மீனவர்கள், தர்மன் என்பவரின் பைபர் படகில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். கோடியக்கரை அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையின் கப்பல், மீனவர்களின் பைபர் படகு மீது மோதியதில் கவிழ்ந்ததாக தெரிகிறது.

இதையடுத்து கடலில் தத்தளித்த மீனவர்களை கப்பலில் ஏற்றிய இலங்கை கடற்படையினர், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை எதுவும் அளிக்காமல் 6 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் அங்கு வந்த சக தமிழக மீனவர்களிடம் செருதூர் மீனவர்களை ஒப்படைத்துவிட்டு இலங்கை கடற்படையினர் அங்கிருந்து சென்றுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து சக மீனவர்களின் உதவியோடு நடுக்கடலில் கவிழ்ந்த தங்களது படகை மீட்ட மீனவர்கள், காயங்களுடன் கரை திரும்பினர். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை கடற்படை அதிகாரிகள் மீது வேதாரண்யம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.