தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கேட்டு கடிதம்..!

Rasus

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மாநில தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பரில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், பழங்குடியினருக்கு ‌உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்தது. இதன் பிறகு பல்வேறு காரணங்களால் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் தாமதமாகி வருகிறது.

இதனிடையே சமீபத்தில், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அலுவலர்களை நியமிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, ஒன்றியங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமிக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை என இந்திய தேர்தல் ஆணையத்திடம் மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கு தீவிரமாக மாநில தேர்தல் ஆணையம் தயாராகி வரும் நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலை அக்டோபர் 4-ஆம் தேதி வெளியிட தயாராகி வரும் நிலையில் இந்த நடடிவக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.