தமிழ்நாடு

நல்லது நடக்கும்: ஆளுநரை சந்தித்த முதலமைச்சர் பேட்டி

Rasus

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்த பின் தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பன்னீர்செல்வம், உறுதியாக நல்லது நடக்கும் என கூறியுள்ளார்.

தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும் அதிமுக-வினர் பிரிந்து உள்ளனர். இந்நிலையில் முதலமைச்சர் பன்னீர்செல்வம் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனுடன் ஆளுநரை சந்தித்துப் பேசினார். சுமார் 30 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது பி.ஹெச்.பாண்டியன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆளுநர் சந்திப்புக்குப் பின் வீடு திரும்பிய முதலமைச்சர் பன்னீர் செல்வம் அங்கு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நல்லாசியோடு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் ஆளுநரை சந்தித்து தமிழகத்தில் நடைபெறும் அனைத்து விபரங்களையும் விரிவாக பேசி வந்திருக்கிறோம். உறுதியாக நல்லது நடக்கும். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். மீண்டும் உறுதியாக தர்மமே வெல்லும் என்று கூறினார்.