உயிரிழந்த குழந்தை, பாதிக்கப்பட்ட குடும்பம் pt web
தமிழ்நாடு

திருவண்ணாமலை: 10 ரூபாய் குளிர்பானம்; மூக்கிலும் வாயிலும் நுரை வந்த நிலையில் உயிரிழந்த சிறுமி

PT WEB

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் அருகே கனிகிலுப்பை எனும் கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியில், ரோட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி ஜோதிலட்சுமி. தம்பதியினர் தனியார் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு 9 வயதில் ரித்தீஷ் என்ற மகனும், 6 வயதில் காவியா ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.

குழந்தைகள் இருவரும் அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பயின்று வந்துள்ளனர். மகன் ரித்திஷ் நான்காம் வகுப்பும், மகள் காவியா ஸ்ரீ ஒன்றாம் வகுப்பும் படித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், காவியா ஸ்ரீ நேற்று முன்தினம் தன் வீட்டின் அருகே உள்ள பெட்டிக்கடையில் பத்து ரூபாய் குளிர்பான பாட்டிலை வாங்கி வந்து குடித்துள்ளார். குளிர்பானம் குடித்த சிறிது நேரத்திலேயே காவியா ஸ்ரீ மூச்சுத்திணறி, மூக்கிலும் வாயிலும் நுரை வந்த நிலையில் மயங்கி விழுந்துள்ளார்.

இதனை அறிந்த பெற்றோர் காவியா ஸ்ரீயை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காவியா ஸ்ரீ உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து ராஜ்குமார் அளித்த தகவலின் பேரில் தூசி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். பத்து ரூபாய் மலிவு குளிர்பானம் வாங்கி குடித்ததாலேயே தன் மகள் இறந்ததாகவும் இதுபோன்று வேறு எந்த குழந்தைக்கும் நேராத வண்ணம் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்குமாறும், இறந்த காவியா ஸ்ரீயின் தந்தை ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

சிறுமி உயிரிழந்தது தொடர்பான, உடற்கூராய்வு அறிக்கை வர 10 முதல் 15 நாட்கள் ஆகும் எனவும், குளிர்பானம் குடித்ததால் உயிரிழப்பு நிகழ்ந்ததா அல்லது உடல் நிலையில் வேறு ஏதும் பாதிப்பு இருந்ததா என்பது ஆய்வறிக்கையில் தெரியவரும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐந்து வயது சிறுமி குளிர்பானம் அருந்தி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.