Accident pt desk
தமிழ்நாடு

திருவள்ளூர்: கார் மீது லாரி மோதிய விபத்து – 5 கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

webteam

செய்தியாளர்:B.R. நரேஷ்

ஆந்திர மாநிலம், ஓங்கோல் பகுதியைச் சேர்ந்தவர்கள் சைதன்யா (21) விஷ்ணு (21), சேத்தன், யுகேஷ், நித்திஷ், வர்மா, ராம்கோமன் ஆகிய 5 பேரும் சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் பயின்று வந்தனர்.

இந்நிலையில், நேற்று விடுமுறை நாள் என்பதால் 5 பேரும் காரில் சித்தூர் மாவட்டம், காணிப்பாக்கம் விநாயகர் கோவில் சென்று விட்டு மீண்டும் சென்னை திரும்பியுள்ளனர்.

Accident

அப்போது திருவள்ளுர் மாவட்டம், ராமஞ்சேரி என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது இவர்கள் சென்ற கார் மீது ராஜஸ்தான் பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இதில், சேத்தன், யுகேஷ், நித்திஷ், வர்மா, ராம்கோமன் ஆகிய ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த சைதன்யா, விஷ்ணு ஆகிய 2 மாணவர்கள் திருவள்ளுர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் விபத்து நடந்த பகுதியில் நேரில் வந்து பார்வையிட்டு வாகனத்தில் சிக்கிய இளைஞர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த விபத்து குறித்து கனகம்மாசத்திரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Accident

விபத்தில் உயிரிழந்த 5 பேரின் உடல்களும் திருவள்ளுார் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் உறவினர்களுக்கு தகவல் தரப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.