தமிழ்நாடு

திருவள்ளூர்: ஏரியில் குளிக்கச் சென்ற அண்ணன் தங்கைக்கு நேர்ந்த பரிதாபம்

kaleelrahman

மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு ஏரியில் குளிக்கச் சென்ற அண்ணன், தங்கை நீரில் மூழ்கி உயிரிழப்பு. சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக போலீசார் அனுப்பிவைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பாலமேடு ஏரியில் குளிக்கச் சென்ற அண்ணன் தங்கை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காட்டுப்பள்ளி ஊராட்சியை சேர்ந்த செப்பாக்கம் கிராமத்தில் வசிப்பவர் ரமேஷ். அவரது மகன் தருண் (17). இவர், தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். தருணின் தங்கை தேவி (14). இவர் அத்திப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று இருவரும் அத்திப்பட்டு அருகே உள்ள பாலமேடு ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது சேற்றில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக்கண்ட அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் பொன்னேரி தீயணைப்பு துறையினருக்கும், மீஞ்சூர் காவல் துறைக்கும் தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் இருவரின் சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மீஞ்சூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தங்கை நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.