தமிழ்நாடு

திருப்பூர்: இருச்சக்கர வாகனத்தில் தாயுடன் சென்ற 4 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்

Veeramani

திருப்பூரில் ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த சாலை விபத்தில், திருப்பூரை சேர்ந்த தக்‌ஷனா என்ற 4 வயது குழந்தை உயிரிழந்தது. குழந்தையின் தாய் பலத்த காயத்துடன் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பலவஞ்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். பனியன் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக இருக்கிறார். இவருடைய மனைவி தீபா. இந்த தம்பதிக்கு 4 வயதில் தக்‌ஷனா என்ற பெண் குழந்தை இருந்தது. தீபாவின் தாய்வீடு பூம்புகார் நகரில் உள்ளது.

இந்நிலையில், இன்று தீபா தனது குழந்தை  தக்‌ஷனாவுடன் தனது தாய்வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஆட்சியர் அலுவலகம் அருகே அவர்கள் வந்தபோது, இருசக்கர வாகனத்தின் பின்னால் மினி பேருந்து ஒன்று அதிவேகமாக வந்ததாக தெரிகிறது. அதே இடத்தில் சாலையின் பக்கவாட்டில் கார் நிறுத்தப்பட்டிருந்த காரணத்தால் இரு சக்கர வாகனம் காரின் மீது உரசி நிலை தடுமாறி தீபாவும் தக்‌ஷனாவும் சாலையில் விழுந்துள்ளனர்.

இதில் மினி பேருந்தின் பின் சக்கரம் குழந்தை மற்றும் தாயின் மீது ஏறி சில அடி தூரம் இழுத்து வந்துள்ளது. இந்த விபத்தில் 4 வயது குழந்தை தக்‌ஷனா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். தாய் தீபா பலத்த காயத்துடன் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், விபத்து தொடர்பாக திருப்பூர் தெற்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.