தமிழ்நாடு

டயர் வெடித்து சாலை தடுப்பு மீது மோதிய கார்: ஓய்வு வட்டாட்சியர் உட்பட இருவர் பலி

kaleelrahman

பர்கூர் அருகே டயர் வெடித்து சாலையின் தடுப்பு மீது கார் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.

தருமபுரி மாவட்டம் ஒட்டப்பட்டி புதிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டாட்சியர் மோகன் (67). இவரது மனைவி ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் சசிகலா (63). பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர்களது மகன் ரமேஷ் (39). மகள் சங்கீதா (31). மற்றும் 4 குழந்தைகள் உட்பட 8 பேர் ஒரே காரில், திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் உள்ள உறவினர் வீட்டிற்கு காரில் சென்றுள்ளனர்.

அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள அங்கிநாயனப்பள்ளி அருகே கார் சென்று கொண்டிருந்த போது, காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மோகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், சசிகலா, சங்கீதா மற்றும் குழந்தைகள் 4 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.