ஆம்ஸ்ட்ராங்  pt web
தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் அடுத்தடுத்து அரங்கேறும் கைதுகள்.. சிக்கும் முக்கிய அரசியல் புள்ளிகள்!

PT WEB

செய்தியாளர் - ஜெ. அன்பரசன்

கடந்த 5 ஆம் தேதி சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவரது வீட்டு வாசலிலேயே படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உட்பட ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய், சிவசக்தி ஆகிய 11 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைதானவர்கள்

சிறையில் அடைக்கப்பட்ட 11 பேரிடமும் காவல்துறை விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், திருவேங்கடம் போலீசாரிடம் இருந்துதப்பிச் செல்ல முயன்றதாக என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் மேலும் மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் குமரேசனின் மகன் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலர் கொடி மற்றும் ஹரிஹரன் என்ற இருவர் கைது!

கைதுசெய்யப்பட்டிருக்கும் மலர் கொடி மற்றும் ஹரிஹரன் இருவரில்,

மலர் கொடி - வழக்கறிஞர் மலர்கொடி பிரபல அதிமுக பேச்சாளரும் மறைந்த பிரபல தாதாவுமான தோட்டம் சேகரின் மனைவியாவார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் திமுக வழக்கறிஞர் அருள் என்பவரோடு மலர்கொடி தொடர்பில் இருந்துள்ளார்.

திமுக வழக்கறிஞர் அருள் வங்கி பணபரிவர்தணையை ஆய்வு செய்தபோது வழக்கறிஞர் மலர்கொடிக்கு லட்சக்கணக்கில் பணம் சென்றுள்ளது தெரியவந்ததுள்ளது. நாட்டு வெடிகுண்டு மலர்கொடி மூலமாக அருளுக்கு சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை - ஸ்கெட்ச் போட்ட திமுக வழக்கறிஞர் அருள்

ஹரிஹரன் - புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஹரிஹரன் (27) எனவரும் அருளுக்கு உதவி செய்ததாக தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட ஹரிஹரன் பூந்தமல்லி தனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை பாஜக மகளிர் அணி துணை செயலாளர் அஞ்சலையை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜக நிர்வாகிகள் செல்வராஜ் மற்றும் அஞ்சலை முக்கிய பங்காற்றியுள்ளதாக கூறுகிறது சென்னை காவல்துறை.