தமிழ்நாடு

காற்றுக்காக வாசலில் அமர்ந்திருந்தபோது சுவர் இடிந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு

webteam

தாம்பரம் அடுத்த பீர்க்கன்கரணை பகுதியில் வசிப்பவா் ராஜாங்கம் (60). பெயிண்டராக பணியாற்றி வந்தார். தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்த ராஜாங்கம், தன்னுடைய மகள்கள் கலா(40), சுமித்திரா(32) ஆகியோருடன் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் முன்பு உள்ள காலி இடத்தில் கட்டிலைப் போட்டு அதில் அமர்ந்து தன்னுடைய மகள்கள் இருவருடன் ராஜாங்கம் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

அந்த காலி இடத்தைச் சுற்றி பழமையான சுவர் இருந்துள்ளது. நேற்றிரவு 9 மணியளவில் காற்றில் சேதமடைந்த அந்த சுவர், மூவரும் அமர்ந்து இருந்த கட்டிலின் மீது பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதில் மூவரும் சிக்கி பலத்த காயம் அடைந்தனர்.

உடனடியாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் மருத்துவமனை செல்லும் வழியிலேயே ராஜாங்கம் உயிரிழந்தார். மகள்கள் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் இன்று காலை உயிரிழந்தனர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் தந்தை, மகள்கள் உட்பட 3 போ் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.