Relatives protest pt desk
தமிழ்நாடு

தூத்துக்குடி: செவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழப்பு? உறவினர்கள் போராட்டம்!

webteam

செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்

திருச்செந்தூர் ஆலந்தலை, ஆலமரத்துவிளையைச் சேர்ந்தவர்கள் வினோத் - சசிகலா தம்பதியர். இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், அடுத்த குழந்தைக்கு கர்ப்பம் தரித்திருந்த இருந்த சசிகலாவை பிரசவத்திற்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 6 ஆம் தேதி குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர். இதையடுத்து அன்று மதியம் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் அவருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது.

Relatives road blocked

இந்நிலையில் மறுதினமான 7 ஆம் தேதி காலை குழந்தைக்கு மூச்சுதிணறல் ஏற்பட்ட நிலையில், குழந்தையை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து 8 ஆம் தேதி தாய் சசிகலாவையும் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 9 ஆம் தேதி குழந்தைக்கு திடீரென பிட்ஸ் வந்துள்ளது.

இதனால் குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (மே 15) குழந்தை உயிரிழந்தது. டாக்டர் இல்லாததாலும், செவிலியர்களின் அலட்சியத்தாலும் குழந்தை இறந்ததாகக் கூறி திருச்செந்தூர் அரசு மருத்துவமனை முன்பு குழந்தையின் தந்தை வினோத் மற்றும் உறவினர்கள் திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர். தகவலறிந்த வந்த போலீஸ் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார் ராமேஸ்வரி, ரெகுராஜன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Relatives

இதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் பாபநாச குமாரிடம் சசிகலா குடும்பத்தார் புகார் அளித்தனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனரிடம் தகவல் தெரிவித்து துறை ரீதியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.