தமிழ்நாடு

தமிழக அரசு கேட்டுக்கொண்டதால் தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம் விளக்கம்

webteam

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு காரணம் தமிழக அரசின் கோரிக்கை தான் என தலைமைத் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜா இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என அளித்த மனுவை, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி விளக்கம் கேட்டிருந்தோம். அத்துடன் திருவாரூர் நிலவரம் என்ன என்று கேட்டிருந்தோம். இதையடுத்து அனைத்து கட்சிகள் கூட்டம் திருவாரூரில் நடத்தப்பட்டது. 

அந்தக் கூட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அனுப்பிய தகவல்கள் அனைத்தையும், தேர்தல் ஆணையத்திற்கு தலைமைத் தேர்தல் அதிகாரி அனுப்பியிருந்தார். அதனை பரிசீலனை செய்து முடித்த பிறகு, தற்போதைக்கு தேர்தல் வேண்டாம் என முடிவு செய்தோம். மேலும், சூழ்நிலை சாதகமாக இருக்கும்போது தேர்தலை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. கஜாவால் ஏற்பட்டது சாதாரண பாதிப்பில்லை என உள்துறை அமைச்சகமும் அறிக்கை அளித்துள்ளது. 18 தொகுதிகளுக்கு (தகுதி நீக்க எம்.எல்.ஏ தொகுதிகள்) ஏப்ரல் மாதம் வரை தேர்தல் நடத்த வேண்டாம் தமிழக தலைமை செயலர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தேர்தல் நடத்தப்படுவது சரியாக இருக்காது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி திருவாரூர் இடைத்தேர்தல் மட்டுமின்றி மற்ற 19 தொகுதிகளுக்கும் கூட, ஏப்ரல் வரை இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, திருவாரூர் இடைத்தேர்தல் ஜனவரி 28ஆம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனால் திமுக, அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்திருந்தனர். இருப்பினும் இப்போதைக்கு தேர்தல் வேண்டாம் என்ற கருத்தாக அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் நிலைப்பாடு இருந்தது. இந்நிலையில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக இன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.