தமிழ்நாடு

ஆபத்தான முறையில் ரயிலில் ஏற முயன்ற மாணவ - மாணவிக்கு பெற்றோர் முன்னிலையில் எஸ்.பி அறிவுரை

நிவேதா ஜெகராஜா

நேற்று முன்தினம் மாலை நேரத்தில் கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் மாணவி ஒருவரும், மாணவர் ஒருவரும் ஓடும் புறநகர் மின்சார ரயிலின் கம்பியை பிடித்தபடி நடைமேடையில் வேகமாக ஓடும் வீடியோகாட்சியொன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.



அந்த வீடியோவின்படி, ஓடிக்கொண்டிருக்கும் மின்சார ரயிலில் முதலில் ஏறும் மாணவி தன் இடது காலை நடைமேடையில் தேய்த்தபடி - வலது காலை ரயிலுக்குள் வைத்தபடி ஆபத்தாக ரயில் ஏறும்காட்சியும், அவரைத் தொடர்ந்து அந்த மாணவனும் அதேபோல ரயிலுக்குள் ஏறுவதும் தெரிந்திருந்தது. இருவருமே அரசு பள்ளி மாணவர்கள் என்பது அவர்களின் சீருடையில் தெரியவந்ததை அடுத்து, அவர்களை தேடும் பணியை காவல்துறையினர் விரைவுப்படுத்தினர்.

அப்படிதேடுகையில் அவர்கள் இருவரும் கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அந்த மாணவி மற்றும் மாணவனை அவர்களது பெற்றோர்களுடன் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்துள்ளார் எஸ்பி வருண் குமார்.

அவர்கள் முன்னிலையில் மாணவிக்கும் மாணவருக்கும் அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் அவர் வழங்கியிருக்கிறார். இப்படியான ஆபத்தான பயணங்களை சிறுவர்களோ, பெரியவர்களோ செய்ய முயலக்கூடாது’ என அறிவுறுத்தியாக கூறப்பட்டுள்ளது.