தமிழ்நாடு

கருணாநிதி நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்தேன்: திருமாவளவன்

Rasus

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்ததாக திருமாவளவன் தெரிவித்தார்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதனையடுத்து தமிழக துணை முதலமைச்சர் ஓபிஎஸ், தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகியோர் இன்று இரவு கருணாநிதி இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், கருணாநிதி நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.  அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது திமுக தலைவர் கருணாநிதி எங்களை அடையாளம் கண்டு கொண்டார். விரைவில் குணமடைந்து நலம் பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து கருணாநிதியை சந்திப்பதற்காக கோபாலபுரத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்றார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கவில்லை, அவரது உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தேன்” என்றார். இதேபோல கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் கோபாலபுரம் சென்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன் என தெரிவித்தார்.

இதனிடையே, திமுக தலைவர் கருணாநிதி வீடு அமைந்துள்ள கோபாலபுரம் பகுதியில் திமுக தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.