Tragedy pt desk
தமிழ்நாடு

தேனி: ரத்தத்தில் 400-க்கும் அதிகமான சர்க்கரையின் அளவு.. 2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சோகம்!

webteam

செய்தியாளர்: மலைச்சாமி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சித்தார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் அவரது மனைவி தமிழ்செல்வி. இந்த தம்பதிக்கு 2 வயதில் லித்திகா ஸ்ரீ என்ற பெண் குழந்தையும் 7 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். நேற்று முன்தினம் வீட்டில் படுத்திருந்த இரண்டு வயது சிறுமி லித்திகா ஸ்ரீக்கு வாயில் திடீரென நுரை தள்ளியபடி அழுதுள்ளது.

Police station

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாயார் தமிழ்ச்செல்வி உடனடியாக குழந்தையை ராஜதானி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 400க்கு அதிகமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக குழந்தையை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ச்சியாக அங்கு குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த சம்பவம் குறித்து ராஜதானி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு வயது குழந்தை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதி மக்களிடைய பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.