Tragedy pt desk
தமிழ்நாடு

தேனி | தனிமையில் வசித்து வந்த பெண் சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்! போலீசார் விசாரணை

webteam

செய்தியாளர்: திருக்குமார்

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சில்லமரத்துபட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் செல்லத்தாய் (55). இவரது கணவர் பழனிச்சாமி ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று தற்போது கோயம்புத்தூரில் தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார்.

இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். மூவருக்கும் திருமணமான நிலையில், சில்லமரத்துப்பட்டியில் செல்லத்தாய் தனிமையில் வசித்து வந்தார்.

Police investigate

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கணவர் பழனிசாமி மற்றும் பிள்ளைகள் மூவரும் செல்லதாயை தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளனர். ஆனால் 2 நாட்களாக செல்லதாயை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தொடர்பு கொண்டுள்ளனர்.

பின்பு வீட்டின் அருகே சென்று பார்த்த அக்கம் பக்கத்தினர் செல்லதாய் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை கண்டு போடி தாலுகா காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்க்கு வந்த தாலூகா காவல்துறையினர் வீட்டினுள் சென்று பார்த்த பொழுது, செல்லத்தாய் கைகள் கட்டப்பட்ட நிலையில், கழுத்து இறுக்கப்பட்டு இறந்து கிடந்துள்ளார். அதனைத் தொடர்ந்து போடி டிஎஸ்பி பெரியசாமி தலைமையிலான காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.