District SP pt desk
தமிழ்நாடு

கல்லூரி மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை: திண்டுக்கல் - தேனி போலீசார் விசாரணை

webteam

செய்தியாளர்: காளிராஜன்.த

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவர், நேற்று காலை தனது சொந்த ஊரில் இருந்து தேனிக்கு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது அவரை கருப்பு உடையணிந்த பெண் ஒருவர் பின் தொடர்ந்து வருவதாக தனது தந்தைக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார். இதனிடையே மாணவியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் பயந்து போன மாணவியின் தந்தை தேனி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Police station

இதனிடையே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், மாணவியை காரில் கடத்திச் சென்று தேனி பகுதியில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், அந்த மாணவியை காரில் அழைத்து வந்து திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே இறக்கி விட்ட மர்ம நபர்கள் தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் முருகேஸ்வரி மாணவியை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இந்நிலையில், தேனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் ராமலட்சுமி தலைமையிலான 4 பேர் கொண்ட குழு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

Govt Hospital

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் மற்றும் திண்டுக்கல் ஏ.எஸ்.பி சிபின் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு சென்று 1 மணி நேரத்திற்கும் மேலாக மாணவியரிடம் விசாரணை செய்தனர். இதையடுத்து திடீரென மாணவிக்கு வலிப்பு ஏற்பட்டதால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தற்போது இரண்டு பிரிவின் கீழ் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தேனி டவுன் காவல் நிலையத்திற்கு மாற்றப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.