விபரீத முடிவெடுத்த மனோன்மணி pt desk
தமிழ்நாடு

தேனி: ஆன்லைன் சூதாட்டத்தில் நகை மற்றும் பணத்தை இழந்த கணவர் - விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு

webteam

செய்தியாளர்: அருளானந்தம்

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி (30) என்பவருக்கும் பெரியகுளம் தென்கரை பகுதியைச் சேர்ந்த மனோன்மணி (27) என்பவருக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் மனோன்மணி கழுத்தில் அணிந்திருந்த 30 பவுன் நகையை கணவர் முத்துப்பாண்டி வாங்கி விற்று அந்த பணத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு உறவினர்களிடம் ரூ.10 லட்சத்திற்கு மேல் கடன் வாங்கி அதையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார்.

கணவர் முத்துப்பாண்டி

கணவரின் இச்செயல் குறித்து பெரியகுளம் காவல் நிலையத்தில் மனோன்மணி நான்கு முறை புகார் கொடுத்ததாகவும், காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் முத்துப்பாண்டி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் மனோன்மணி கொடுத்த புகார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த மனோன்மணி, கடந்த 5 தினங்களுக்கு முன்பாக தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். பின் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து நேற்று இரவு வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், “என் மகள் புகார் கொடுத்த போதே போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று அவள் உயிர் பறிபோயிருக்காது” என மனோன்மணியின் தாய் குற்றம் சாட்டி உள்ளார். இதற்கிடையே முத்துப்பாண்டி தலைமறைவாகியுள்ளார். இது தொடர்பாக பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் தற்போது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Police station

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.