Tragic decision pt desk
தமிழ்நாடு

தேனி: கணவன் மனைவி இடையே குடும்பத் தகராறு – விபரீத முடிவெடுத்த பெண் மருத்துவர்

webteam

தேனி மாவட்டம் சின்னமனூர் சிவசக்தி நகரை சேர்ந்தவர் மணிமாலா (38). இவர், சின்னமனூர் அரசு மருத்துவமனையில் தோல் நோய் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் மணிகண்டன் அப்பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், ஜவுளி தொழில் சம்பந்தமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Police station

இந்நிலையில், வழக்கம் போல் நேற்று இரவு கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை வந்துள்ளது. பின்னர் மணிகண்டன் அதிகாலை மனைவியின் அறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு அவரது மனைவி தற்கொலை செய்ததை அறிந்திருக்கிறார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டன் மனைவியை மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், மருத்துவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சின்னமனூர் காவல்துறையினர், மருத்துவர் மணிமாலாவின் இறப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.