தமிழ்நாடு

மருத்துவர்போல் நடித்து நோயாளிகளிடம் பணம் பறிக்க முயன்ற இளைஞர் -சிறைப்பிடித்த மக்கள்

webteam

கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்போல் நடித்து நோயாளிகளிடம் பணம் பறிக்க முயன்ற இளைஞனை காவல்துறையினர் கைது செய்தனர். 

கோவை அரசு மருத்துவமனைக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வந்த இளைஞன் ஒருவர், அறுவை சிகிச்சையின்போது மருத்துவர்கள் பயன்படுத்தும் உடையை அணிந்து வளாகத்தை சுற்றி வந்துள்ளார். மேலும் தன்னை மருத்துவர் என கூறிக்கொண்டு மருத்துவர்களான உணவுவிடுதியில் உணவருந்திய அவர் நோயாளிகளை மிரட்டி பணம் கேட்டதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்தவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகத் தெரிகிறது.

இதனால் சந்தேகமடைந்த நோயாளியின் உறவினர்கள் அவரை சிறைபிடித்து, பந்தய சாலை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறைனர் மருத்துவர் வேடத்தில் இருந்த இளைஞனை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் சிறைபிடிக்கப்பட்ட நபர், சென்னை வியாசர்பாடி அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த சாரங்கன் (18) என்பதும் அவர் சென்னை, திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும் சிவானந்தா காலனி பகுதியில் திருநங்கைகள் சிலருடன் தங்கியிருந்த சாரங்கன் அங்கும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடமிருந்து ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனம் மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.