தமிழ்நாடு

கணவன் மரண செய்தி கேட்டு மயங்கி விழுந்த மனைவியும் உயிரிழந்தார்:கோவையில் சோகம்!

kaleelrahman

கோவையில் இன்று அதிகாலை கணவன் இறந்த செய்தி கேட்டு மனைவி கதறி அழுது அவர் மீது மயங்கி விழுந்த சிறிது நேரத்தில் அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் ராமமூர்த்தி (70), இவருடைய மனைவி சரோஜினி (65), இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மகன் விபத்தில் இறந்துவிட்டார். இந்நிலையில் குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள தன்னுடைய மகள் வீட்டில் ராமமூர்த்தியும் சரோஜினியும் வசித்து வந்தனர்.

நீதிமன்றத்தில் குமாஸ்தாவாக இருந்து ஓய்வு பெற்ற ராமமூர்த்தி, உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். இந்த தகவலை அறிந்ததும் அவரது மனைவி கதறி அழுதவாறு சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தொண்டாமுத்தூர் பகுதியில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

கணவன் இறந்த சில மணி நேரத்திலேயே மனைவியும் இறந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. அந்த ஊர் மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அவருடைய பாசப்பிணைப்பை பார்த்து வியந்து போயினர். தொடர்ந்து சற்று முன்பு தொண்டாமுத்தூரில் உள்ள மின்மயானத்தில் கணவன் மனைவி இருவரும் தகனம் செய்யப்பட்டனர். இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.