தமிழ்நாடு

சிவகாசி: அரசு பேருந்து மோதிய விபத்தில் கர்ப்பிணி தாய், ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

kaleelrahman

சிவகாசியில் அரசு பேருந்து மோதிய விபத்தில் கர்ப்பிணி தாய் மற்றும் ஒரு வயது குழந்தை உயிரிழந்தனர். பிறந்தநாளன்று குழந்தை உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி அருகே தாயில்பட்டியை அடுத்த கோட்டையூரைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்கு சுந்தரலட்சுமி என்ற மனைவியும், கவிபாரதி என்ற ஒரு வயது மகளும் உள்ளனர். குழந்தை கவிபாரதியின் முதல் பிறந்த நாள் இன்று. தனது உறவினர்களின் வீட்டில் குழந்தையின் பிறந்தநாளை கொண்டாடிய கருப்பசாமி, தனது குடும்பத்துடன் பாறைப்பட்டியில் இருந்து சிவகாசி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சிவகாசி அரசு பணிமனை முன்பாக சென்று கொண்டிருந்தபோது சாத்தூரிலிருந்து சிவகாசி நோக்கி வந்த அரசு பேருந்து, கருப்பசாமியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கருப்பசாமியின் மனைவி 7 மாத கர்ப்பிணியான சுந்தரலட்சுமி மற்றும் ஒரு வயது மகள் கவிபாரதி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் அரசு பேருந்து ஓட்டுநர் சேகர் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு வயது குழந்தையும் 7 மாத கர்ப்பிணி தாயும் உயிரிழந்த சம்பவம் அக்குடும்பத்தையும் அக்கிராம மக்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.