Rayapeta GH pt desk
தமிழ்நாடு

சென்னை: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையை அடித்து நொறுக்கிய ரவுடி கும்பல் – பின்னணி என்ன?

webteam

போதை மாத்திரைகளை விற்பனை செய்த வழக்கில் அபிராமபுரம் போலீசார் மயிலாப்பூரைச் சேர்ந்த சைக்கோ சரண், மந்தவெளியைச் சேர்ந்த போண்டா ராஜேஷ் மற்றும் தினேஷ் ஆகிய மூன்று நபர்களை நேற்று இரவு கைது செய்துள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட நபர்களை சிறைக்கு அனுப்புவதற்கு முன்பாக உடல்நல தகுதிச் சான்று பெறுவதற்காக அவர்களை இன்று மதியம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து வந்துள்ளனர்.

rowdy gang smashed

அப்போது கைது செய்யப்பட்ட மூன்று நபர்களின் நான்கு நண்பர்கள் மற்றும் ஒரு திருநங்கை ஆகிய ஐந்து நபர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட மூவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லையென்றால் தாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என கூறியதோடு பிளேடால் தங்களைத் தாங்களே கை கால்களில் அறுத்துக் கொண்டுள்ளனர். அங்கிருந்தவர்கள் பிடிக்க முற்பட்டபோது, மருத்துவமனை வளாகத்தில் இருந்த பொருட்களை அடித்து சூறையாடினர்.

அவசர சிகிச்சை பிரிவில் இருந்த கண்ணாடிகள், நோயாளிகளை பரிசோதனை செய்யும் கருவிகள், கணினி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி அராஜகம் செய்துள்ளனர். இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் மருத்துவமனையை சூறையாடிய கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

rowdy gang smashed

மருத்துவமனை பாதுகாப்பு போலீசார் இருக்கும் போதே நிகழ்ந்த இந்த சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.