தமிழ்நாடு

கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்த மூதாட்டி: உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்

kaleelrahman

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்த மூதாட்டியை தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட நிகழ்வு மக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள செரியலூர் இனம் கிராமத்தைச் சேர்ந்த செல்லையா என்பவரின் மனைவி ராஜாமணி (70). மூதாட்டியான இவர், இன்று தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது தோட்டத்தில் இருந்த 60 அடி ஆழ தண்ணீர் உள்ள கிணற்றில் தவறு விழுந்துவிட்டார்.

அதனைப் பார்த்த அருகே இருந்தவர்கள் உடனடியாக இதுகுறித்து கீரமங்கலம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் உடனடியாக கிணற்றுக்குள் இறங்கி தண்ணீரில் தத்தளித்த மூதாட்டியை உயிருடன் மீட்டு கீரமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தற்போது அந்த மூதாட்டி நலமுடன் உள்ள நிலையில், தகவல் வந்தவுடன் துரிதமாக செயல்பட்டு உரிய நேரத்திற்குள் சம்பவ இடத்திற்கு சென்று 60 அடி ஆழ கிணற்றில் தண்ணீரில் தத்தளித்த படி உயிருக்கு போராடிய மூதாட்டியை உயிருடன் காப்பாற்றிய தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.