தமிழ்நாடு

அரசு காப்பகத்தில் இருந்த சிறுமிகள் தப்பியோட்டம்: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

அரசு காப்பகத்தில் இருந்த சிறுமிகள் தப்பியோட்டம்: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

kaleelrahman

வேலூர் அரசு காப்பகத்தில் இருந்து சிறுமிகள் தப்பியோடியது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேலூர் அரசு காப்பக கண்காணிப்பாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு, வேலூர் அரசு காப்பகத்தில் இருந்து தப்பியோடிய தனது 16 வயது மகளை கண்டுபிடித்து தரக்கோரி, அச்சிறுமியின் தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.


அந்த மனுவில், இரு பெண்கள், 4 சிறுமிகள் தப்பியோடியது குறித்து காப்பக கண்காணிப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில் பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளபோது, தன் மகள் உள்ளிட்ட சிறுமிகளை கண்டுபிடிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், வி.சிவஞானம் அமர்வு, சிறுமிகள் தப்பியோடியது குறித்து மார்ச் 16-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேலூர் அரசு காப்பக கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார். இதற்கிடையில் மனுதாரரின் மகள் கிடைத்துவிட்டால், வேலூர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.