தமிழ்நாடு

யோகா பயிற்சி அளிக்க ஆயுள் தண்டனை கைதிக்கு நீதிமன்றம் அனுமதி

webteam

ஆயுள் தண்டனை கைதி ஒருவர் சிறையில் யோகா பயிற்சியளிப்பதை தொடர சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

தருமபுரி மாவட்டம் இரணியன் அள்ளி கிராமத்தை சேர்ந்த அமுதாவின் மகன் செந்தில். இவர் கடந்த 1998ல் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 1999 முதல் சேலம் மத்திய சிறையில் இருந்து வருகிறார். சிறையில் நன்னடத்தையுடனும், சக கைதிகளுக்கு யோகா பயிற்சியும் வழங்கிவரும் செந்திலை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி அமுதா ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை ஏற்று உயர்நீதிமன்றம், அமுதாவின் கோரிக்கையை 6 வாரங்களுக்குள் பரிசீலனை குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று சேலம் சிறைக் கண்காணிப்பாளருக்கு கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி சிறைக் கண்காணிப்பாளருக்கு எதிராக அமுதா நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அவமதிப்பு வழக்கு தொடர்ந்தவுடன்,மகன் செந்தில் அளித்துவந்த யோகா பயிற்சிக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுவரபட்டது.

இதனைக் கேட்ட நீதிபதிகள்,மன அழுத்தத்திலிருந்து சிறை கைதிகள் விடுபடுவதற்காக யோகா பயிற்சியை தருகிறார் என்றும் அதை தடுத்தால் நஷ்டம் சிறை கைதிகளுக்கும்,அதிகாரிகளுக்கும்தான் எனக் கூறியதுடன் யோகா பயிற்சியை செந்தில் தொடர்ந்து அளிக்க அனுமதி அளித்தனர். மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து அரசு பதிலளிப்பதற்காக வழக்கை ஜூன் மாதம் ஒத்திவைத்தனர்.