தமிழ்நாடு

தமிழகத்தின் மலை கிராமத்துக்கு 72 ஆண்டுகளுக்குப்பின் மின் இணைப்பு !

webteam

நெல்லை மாவட்டம் பாபநாசம் வனப்பகுதியில் உள்ள சின்னமயிலாறு காணிக் குடியிருப்புக்கு சுதந்திரமடைந்த பிறகு தற்போதுதான் முதன்முறையாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 

திருநெல்வேலி மாவட்டம்,மேற்குத் தொடர்ச்சி மலையில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட முண்டந்துறை வனச்சரகத்தில் அகஸ்தியர் காணிக் குடியிருப்பு, சின்னமயிலாறு காணிக் குடியிருப்பு, பெரியமயிலாறு காணிக் குடியிருப்பு, இஞ்சிக்குழி, சேர்வலாறு காணிக் குடியிருப்பு உள்ளிட்ட பழங்குடி மக்கள் வாழும் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இவற்றில் சின்னமயிலாறு, பெரியமயிலாறு, இஞ்சிக்குழி உள்ளிட்ட குடியிருப்புகளுக்கு இதுவரை மின் இணைப்பு வழங்கப்படாமல் இருந்தது. பெரியமயிலாறு, இஞ்சிக்குழி இரண்டும் காரையாறு அணைக்கு மேல் அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதால், அங்கு மின் இணைப்பு கொடுக்க முடியாத நிலை உள்ளது. ஆனால், சின்னமயிலாறு, காரையாறு அணையின் அடிவாரப் பகுதியில் தாமிரபரணியின் அக்கரையில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 60 குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். 30-க்கும் அதிகமானோர் பள்ளி,கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இங்கு வசிப்போர் மின் இணைப்பு வழங்க வேண்டும் என நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால்,காப்புக்காடு பகுதி என்பதை காரணம் காட்டி, வனத்துறையினர் இப்பகுதிக்கு இதுவரை மின் இணைப்பு வழங்கப்படாமலேயே இருந்து வந்தனர். இந்த சுழலில், சின்னமயிலாறு காணிக்குடியிருப்புக்கு மின்இணைப்பு வழங்க, அண்மையில் வனத்துறையினர் அனுமதி அளித்தனர். மேலும் அதற்கான முழு நிதி உதவியையும் அவர்களே வழங்கினர். 

இதையடுத்து,கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மின் வாரியத்தினர் சின்னமயிலாறு பகுதிக்கு மின்சாரம் கொண்டு செல்வதற்காக, மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றி அமைக்கும் பணியில் தீவரமாக ஈடுபட்டனர். தற்போது அனைத்துப் பணிகளும் அங்கு நிறைவடைந்த நிலையில்,48 குடியிருப்புகள் மற்றும் ஒரு நீர் இறைக்கும் மோட்டாருக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 70 ஆண்டுகள் சுதந்திரத்திற்குப்பின் மின்இணைப்பு பெற்றுள்ள அப்பகுதி மலைவாழ் மக்கள், பெரும் மகிழ்ச்சியில் அடைந்துள்ளனர்.