தமிழ்நாடு

லட்சக்கணக்கானோரை ஏமாற்றிய சீட்டு நிறுவனம்! வட்டிக்கு ஆசைப்பட்டு ஏமாந்த மக்கள்

webteam

ஆயிரம் கோடி மோசடி செய்த சீட்டு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருச்சி தில்லை நகரில் செந்தூர் பின்கார்ப் என்ற சீட்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து வந்துள்ளனர். மாதம் 35 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் 300 ரூபாய் வீதம் வட்டி என்றும் அதுபோல் ஒவ்வொரு தொகைக்கும் தினமும் வட்டி வழங்கப்படும் எனவும் ஆசை வார்த்தை கூறி தன் நிறுவனத்தில் ஏராளமான வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் கவர்ந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த நிறுவனத்தில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு வட்டியும் வரவில்லை செலுத்திய தொகையையும் திருப்பித் தரவில்லை எனத் தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது கிட்டத்தட்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழகம் முழுவதும் முதலீடு செய்து மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் ஏமாற்றிய தொகை ரூ 1,000 கோடி எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதனால், இதுகுறித்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவிலும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தமிழகம் முழுவதும் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் திருச்சிக்கு புறப்பட்டு வந்தனர்.

அதன்பிறகு அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். முதலீட்டு தொகையை பெற்றுத் தர வலியுறுத்தியும் ஏமாற்றிய செந்தூர் பின்கார்ப் இயக்குனர் முத்துராமலிங்கம் அவரது மனைவி பாரதி ஆகியோரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.