Driver heart attack pt desk
தமிழ்நாடு

திருப்பூர்|நெஞ்சுவலியிலும் இறுதிமூச்சுவரை கடமையைஆற்றி பிஞ்சு குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்

webteam

திருப்பூர் அருகே ஓட்டுநர் என்பதையும் தாண்டி தனது கடமையை இறுதி மூச்சுவரை செய்துள்ளவர்தான் வெள்ளக்கோயிலை சேர்ந்த சேமலையப்பன். வெள்ளகோவில் அய்யனூர் அருகே உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் கடந்த 8 மாதங்களாக பள்ளி வாகன ஓட்டுநராக பணியாற்றி வருபவர்தான் சேமலையப்பன். இவர் புதன்கிழமை மாலை வழக்கம் போல் குழந்தைகளை பள்ளியில் இருந்து ஏற்றிக்கொண்டு கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தை ஓட்டிச்சென்றார்.

School bus

ஆப்போது வாகனத்தில் 20 குழந்தைகள் இருந்த நிலையில் சேமலையப்பனுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அந்நேரத்திலும் சுதாரித்துக் கொண்டு வாகனத்தை நிதானமாக சாலையோரத்தில் நிறுத்திவிட்டு மயங்கிச் சரிந்துள்ளார். இதைக் கண்ட பள்ளி மாணவர்கள் பயத்தில் அலறினர். அதே பள்ளி வாகனத்தில் உதவியாளராக பணியாற்றும் சேமலையப்பனின்ம னைவியும் கதறி அழுதுள்ளார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் பள்ளி வாகனத்தை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.

இதையடுத்து சேமலையப்பனை மீட்டு உடனடியாக காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். சமூக வலைதள பயனர்கள் பலரும் ஓட்டுநர் சேமலையப்பனின் புகைப்படத்தை பகிர்த்து நெகிழ்ச்சி தரும் சொற்களால் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

cm stalin

இந்நிலையில், தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்த நிலையிலும், தன் பொறுப்பிலிருந்த பள்ளி குழந்தைகளின் விலை மதிப்பில்லாத உயிர்களை காப்பாற்றி, பின்னர் தனது இன்னுயிரை இழந்த சேமலையப்பனின் கடமை உணர்ச்சியையும், தியாக உள்ளத்தையும் தலைவணங்கி போற்றுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ஓட்டுநர் சேமலையப்பன் உயிர் நீத்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்ததாக கூறியுள்ள முதலமைச்சர், அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். சேமலையப்பன் குடும்பத்தினருக்கு ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடஉத்தரவிட்டுள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.