தமிழ்நாடு

பச்சிளம் குழந்தைக்கு பாதரசம் கலந்து கொடுத்த கொடுமை

webteam

நாகை மாவட்டத்தில், பிறந்த ஒரு வாரத்திற்குள் பச்சிளம் குழந்தைக்கு வெற்றிலைச்சாறுடன் பாதரசத்தைக் கலந்து கொடுத்த அவலம் அரங்கேறியுள்ளது.

பெருஞ்சேரியைச் சேர்ந்த சரவணன் என்பவரது மனைவி சுமித்ராவுக்கு, கடந்த 16 ஆம் தேதி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தையின் வயிறு வீங்கியது போல இருந்ததால், தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவர்கள் ஒரு வாரம் சிகிச்சையளித்தனர். அப்போது குழந்தை கறுப்பு நிறத்தில் வாந்தி எடுத்ததோடு‌, உடல்நலம் மிகவும் மோசமானது. 

இதுகுறித்து குழந்தையின் குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் கேட்டபோது, நாட்டு வைத்திய முறைப்படி பாதரசத்தை வெற்றிலை சாற்றில் கலந்து கொடுத்ததாக கூறியுள்ளனர். பின்னர் கூடுதல் கவனம் எடுத்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கடந்த 2 நாள்களாக குழந்தைகள் நல தீவிர சிகிச்சை பிரிவில், குழ‌ந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை தற்போது அபாய கட்டத்தைத் தாண்டியிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.