தமிழ்நாடு

“ஆள் பற்றாக்குறையால் வழக்குகளை விசாரிக்க முடியாது” - சிபிஐ விளக்கம்

webteam

சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ விளக்கம் அளித்துள்ளது.

சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி பிறப்பித்த அரசாணையை எதிர்த்த வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு முன் மீண்டும்  விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்து கடிதம் அனுப்பியுள்ளது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அரசு தலைமை வழக்கறிஞர், சிலை கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை அனுப்பி வைக்கும் படியும், அதன் அடிப்படையில் இந்த வழக்குகளை சிபிஐ விசாரிக்க முடியுமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சிபிஐ எழுதியுள்ள கடிதத்தில், அதிக எண்ணிக்கையில் சிலைக் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போதிய ஆட்கள் இல்லாததால் சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்க முடியாது எனக் கடிதத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. இருப்பினும் சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு, முழு ஒத்துழைப்பு வழங்கப்படுமென சிபிஐ கூறியுள்ளது. ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்குவது, இன்டர்போலுடன் இணைந்து செயல்படுவது ஆகியவற்றில் சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு ஒத்துழைப்பு தரப்படும் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.