தமிழ்நாடு

குளத்தில் தவறி விழுந்து இறந்த சிறுவன் - துக்கம் தாளாமல் தந்தை எடுத்த விபரீத முடிவு

webteam

மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியில் குளத்தில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த நிலையில், அந்த துக்கம் தாங்காமல் சிறுவனின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடியைச் சேர்ந்தவர் வினோத் (வயது 40). வீடியோ எடுக்கும் தொழில் செய்து வந்த இவருக்கு சாரதா என்ற மனைவியும், சாலமன், சாம்சன்(10), ஷாலினி ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் வினோத்தின் மகன் சாம்சன் நாகங்குடி கிராமத்தில் உள்ள தண்ணீர் பாய்ந்தான் குளத்திற்கு விளையாட சென்றதாகத் தெரிகிறது.

மாலை வேளை ஆனதால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிறுவர்களை வீட்டிற்கு செல்ல கூறி விரட்டியுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்த சிறுவர்கள் வீட்டிற்கு ஓடிவிட, சாம்சன் மட்டும் குளக்கரையில் பதுங்கி இருந்ததாகவும், சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்ட சாம்சன் குளத்தில் தவறி விழுந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இரவு 7 மணி ஆகியும் சாம்சன் வீட்டிற்கு வராத நிலையில் சிறுவனின் பெற்றோர் குளத்திற்கு வந்து தேடினர். ஆனால் சாம்சன் கிடைக்காததால் இது குறித்து மயிலாடுதுறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துக்குமார் தலைமையிலான தீயணைப்பு துறையினர் குளத்தில் இறங்கி கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு பின்னர் அவரது உடலை மீட்டெடுத்தனர்.

இந்தச் செய்தியை கேள்விப்பட்ட அவரது தந்தை வினோத் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள்ளே சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இருவரது உடல்களும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து மயிலாடுதுறை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.