தமிழ்நாடு

“பாண்டியராஜன் உடனடியாக மன்னிப்பு கேட்காவிட்டால்....”- தங்கம் தென்னரசு கடும் கண்டனம்

“பாண்டியராஜன் உடனடியாக மன்னிப்பு கேட்காவிட்டால்....”- தங்கம் தென்னரசு கடும் கண்டனம்

Rasus

ஸ்டாலினின் மிசா சிறைவாசத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என திமுகவின் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தற்போது திமுக தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலினின் மிசா சிறைவாசத்தை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கொச்சைப்படுத்தி பேசியதாக திமுக சார்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நாளை ஆவடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்டாலினின் மிசா சிறைவாசத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என திமுகவின் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “ அமைச்சர் பாண்டியராஜன், திமுக தலைவர் ஸ்டாலினின் மிசா சிறைவாசம் குறித்து அநாகரிகத்தின் உச்சமாக சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அரசியல் என்பது வியாபாரம் என்றும், அதில் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த அரசியல் வியாபாரி என்பதை தினமும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார் பாண்டியராஜன். கீழடி என்பது தமிழர் பண்பாடு தமிழர் நாகரிகம் என்பதை மறைத்துவிட்டு அது பாரத பண்பாடு என்று வாய்கூசாமல் கூறி தமிழன துரோகியாக மாறியுள்ளார்.

ஸ்டாலின் குறித்து அநாகரிகத்தின் உச்சகட்டமாக பாண்டியராஜன் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது மட்டுமில்லாமல், எதிர்வினைக்கும் உரியதாகும். பாண்டியராஜன் உடனடியாக தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். அத்துடன் மன்னிப்பும் கேட்க வேண்டும். அப்படி மன்னிப்பு கேட்க தவறினால், ஆவணப் போக்குடன் கூடிய அமைச்சரின் செயலுக்கு தக்க பதிலடியை கொடுக்க திமுக தயாராக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.