தமிழ்நாடு

’பிடிக்காவிட்டால் என்னை நீக்க வேண்டியதுதானே..’: ஆடியோ விவகாரத்தில் தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்

webteam

’’என்னை பிடிக்காவிட்டால் கட்சியில் இருந்து நீக்குங்கள், தேவையில்லாமல் அவதூறு பரப்ப வேண்டாம்’’ என்று அமமுக வின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.

அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சிக்கும் ஒலிப்பதிவு நேற்று வெளியானது. இது அரசியல் ‌களத்தைப் பரபரப்பாக்கி இருக்கிறது.

அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்தது முதல், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி நடத்துவது வரையிலும் டிடிவி தினகரனின் நம்பிக்கைக்குரியவராக, தங்க தமிழ்ச்செல்வன் இருந்தார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். கடந்த மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதி யில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மகனை எதிர்த்தும் களம் கண்டார். 

தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் தொடர்ந்து அமமுகவிற்காக களப்பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் தொலைபேசியில் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சிக்கும் ஒலிப்பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிடிவி தினகரன் உதவியாளரிடம் தங்கத் தமிழ்ச்செல்வன் பேசும் அந்த வீடியோவில், நான் விஸ்வரூபம் எடுத்தால் தாங்கமாட்டீர் கள் என்று தங்க தமிழ்ச்செல்வன் எச்சரிக்கிறார்.

இந்த ஒலிப்பதிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தங்க தமிழ்செல்வனிடம் புதிய தலைமுறை கருத்து கேட்டபோது, ‘’கட்சியை பற்றி நான் பேசியது உண்மைதான். நான் நேர்மையானவன். சில விஷயங்களை மாற்ற வேண்டும், சரிபண்ணுங்கள் என்று சொன்னேன். அதைக் கண்டிக்காமல், சமூக வலைத்தளங்களில் தவறானச் செய்தியை வெளியிடும் போது மனது கஷ்டமாக இருக்கிறது. எனது கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் என்னைக் கட்சியில் இருந்து நீக்க வேண்டியது தானே. என்னை பற்றி அவதூறு பரப்புவது ஏன்? இதற்கு மேல் இதுபற்றி கருத்துதெரிவிக்க விரும்பவில்லை’’ என்று கூறி போனை கட்  செய்து விட்டார்.