தமிழ்நாடு

எம்எல்ஏ வீட்டு காதணி விழா... 1200 கிலோ கறி விருந்து.. மொய் மட்டும் இத்தனை கோடிகளா?

webteam

தஞ்சாவூரில் 1,200 கிலோ கறி விருந்து போட்டு பிரமாண்டமாக காதணி விழாவை நடத்தியுள்ளார் எம்எல்ஏ அசோக் குமார். அவருக்கு 11 கோடி ரூபாய் மொய் கிடைத்துள்ளது அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார். இவர் தனது பேரக்குழந்தைகளுக்கு நேற்று காதணி விழா நடத்தியுள்ளார். இந்த விழாவிற்கு தொகுதி முழுவதும் அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டது. அவரது அழைப்பை ஏற்று ஏராளமான பொதுமக்கள் மற்றும் திமுக கட்சி தொண்டர்கள் கலந்துக் கொண்டனர்.

தனியார் மண்டபத்தில் நடந்த இந்த விழாவில் மொய் எழுதுவதற்கு தனியாக பந்தல் அமைத்து 18 இடங்களில் மொய் எழுதப்பட்டன. மண்டபத்தின் அடுத்த பகுதியில் பிரமாண்டமான பந்தல் அமைத்து விழாவிற்கு வருபவர்களுக்கு கறி விருந்து கொடுக்கப்பட்டது. மண்டபத்தின் உள்பகுதியில் சைவ விருந்து நடைப்பெற்றது.

இந்த கறி விருந்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டு விருந்து உண்டு குழந்தைகளை வாழ்த்திச் சென்றனர். மொய் எழுதப்படும் பணத்தை எண்ணுவதற்கு மெஷின் வைக்கப்பட்டிருந்தது. அவருக்கு 11கோடி ரூபாய் மொய் கிடைத்ததுள்ளது அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.