தமிழ்நாடு

முற்போக்கு மரபை தாங்கி நின்ற மகத்தான மனிதர் - கி.ரா. மறைவுக்கு அரசியல் தலைவர்கள் புகழஞ்சலி

JustinDurai

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ரா என்கிற கி.ராஜநாராயணன்  மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

மு.க.ஸ்டாலின், தமிழக முதலமைச்சர்: 'கரிசல் குயில்' கி.ரா அவர்களின் மறைவால் தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள்! கரிசல் இலக்கியமும், இந்த மண்ணும், தமிழும் உள்ளவரை அவரது புகழ் வாழும்! அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும். குடும்பத்தினர் - வாசகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்! 

எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர்: சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ரா என்கிற கி.ராஜநாராயணன் (99) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ, மதிமுக பொதுச்செயலாளர்: செந்தமிழை, செழுந்தமிழாய் செழிக்கச் செய்யும் கரிசல் காட்டு மண்ணில், இடைசெவலில் மலர்ந்த, ஒப்புவமை சொல்ல முடியாத புதுமையாளர், புரட்சியாளர் கி. இராஜநாராயணன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

கோபல்ல கிராமம், கரிசல் காட்டுக் கடுதாசி, கோபல்லபுரத்து மக்கள் என, தமிழில் அதுவரை இல்லாத புதிய எழுத்து நடையை அறிமுகம் செய்து, வரலாற்றுச் செய்திகளை, சொல் புதிதாய், சுவை புதிதாய் எல்லோரும் படிக்கின்ற எளிய நடையில், கரிசல் மண்ணின் மக்களுடைய பேச்சு வழக்கில் நமக்குத் தந்த கி.இரா. அவர்கள் இலக்கியத் துறையில் பேராட்சி புரிந்தார். கரிசல் வட்டார வழக்குச் சொல் அகராதி ஆக்கித் தந்தார்.
உலகெங்கும் வாழும் இளம் இலக்கியவாதிகள், நாட்டுப்புறக் கலை ஆர்வம் கொண்டவர்கள் அத்தனைப் பேருக்கும் ஊக்கம் அளித்து ஆதரித்து வளர்த்து வந்தார். எழுத்தாளர்களுக்கு ஒரு செவிலித்தாயாகத் திகழ்ந்த அன்புப் பாசறை அவரது புதுவை இல்லம் ஆகும். சிந்தனையாளர்களை ஊக்கப்படுத்தி, ஆற்றுப்படுத்தி வாழ்ந்த கி.இரா போன்ற ஒரு மாமனிதரை, எங்கு தேடினாலும் கிடைக்காது. இன்று, எண்ணற்ற இளைஞர்கள், அவரது எழுத்து நடையைப் பின்பற்றி எழுதுகின்றனர். திரைப்படங்களை இயக்குகின்றனர்.
புதுவை பல்கலைக்கழகம், அவரை மதிப்புறு பேராசிரியர் ஆக ஏற்று, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவரைப் பேணிப் பாதுகாத்து, அவருடைய வழிகாட்டுதலில், தமிழ் இலக்கியக் கருத்து அரங்குகளையும், பின் நவீனத்துவச் சிந்தனைகளையும், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்களிடம், அடுத்த நூற்றாண்டை நோக்கி அவர்களை இட்டுச் செல்லவும் ஆற்றியுள்ள பணி மகத்தானது.
ரசிகமணியின் தாக்கத்தோடும், பொக்கைவாய்ப் சிரிப்போடும், குழி விழுந்த கண்களில் பகலவனைப் போல ஒளிவீசும் பார்வையோடும் அவர் வாழ்ந்த நாள்கள் ஒவ்வொன்றும், தமிழுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கு உரம் ஊட்டியது. வரமாக வாய்த்தது. முன்னோர் மரபையும், பின்வரும் உலகையும், இணைத்த மையப்புள்ளி கி.இரா. அவர்கள், நம் நெஞ்சங்களில் என்றென்றும், நிலைத்த புகழுடன் இருப்பார். தமிழ் என்று சொன்னாலே நமக்கு எப்படி உள்ளம் பூரிக்கின்றதோ, அதைப்போல, கி.இரா. என்கின்ற இரண்டு எழுத்துகள், தமிழ் உள்ளவரை, தமிழர்கள் உள்ளவரை, இலக்கியங்கள் உள்ளவரை, புன்னகை பூத்துக் குலுங்கும்.
கி.இராவுடன் எனது தொடர்பு, 50 ஆண்டுகளைக் கடந்தது. அவ்வப்போது அவரது நலம் விசாரித்துக் கொள்வேன். கி.இரா. அவர்களை ஆசிரியராகக் கொண்டு, கதைசொல்லி என்ற இலக்கிய இதழைத் தொடர்ந்து நடத்தி வருகின்ற கே.எஸ். இராதாகிருஷ்ணன், அவருக்கு நெருக்கமாகவும், தொடர்ந்து தொடர்பிலும் இருந்து வந்தார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கி.இரா. அவர்களுடைய 85 ஆவது பிறந்த நாளை, தலைநகர் சென்னையில் நடத்தி, அவரைச் சிறப்பித்தோம். நூற்றாண்டை வெகு சிறப்பாகக் கொண்டாட, தமிழ் இலக்கிய உலகம் ஆர்வத்துடன் காத்திருந்த வேளையில், அந்தக் கரிசல் குயில் பறந்து விட்டது. கி.இரா.வை இழந்து வாடும் இலக்கிய ஆர்வலர்கள், அவரது கரிசல் இலக்கியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அத்தனைப் பேருக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

டிடிவி தினகரன், அமமுக பொதுச்செயலாளர்: முதுபெரும் தமிழ் எழுத்தாளர், கரிசல் இலக்கியத்தின் பிதாமகர், பெரியவர் திரு. கி.ராஜநாராயணன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். தமிழின் தனித்துவமான கதை சொல்லியாக, அழியாத படைப்புகளை தந்தவராக, நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடியாக திகழ்ந்த கி.ரா அவர்களின் மறைவு தமிழுக்கு பேரிழப்பாகும். அன்னாரது மறைவால் வாடும் உறவினர்கள், நண்பர்கள், வாசகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜி.ராமகிருஷ்ணன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்: சாகித்ய அக்காடமி விருதுபெற்ற மூத்த எழுத்தாளர் கி.இராஜநாராயணன் நூற்றாண்டு கொண்டாடுவார் என்று எதிர்பார்த்தோம். கரிசல் இலக்கியம் என்ற கருத்துப்படிவத்தை முன்வைத்தவர். கலை மக்களுக்காகத் தான் என்று மக்களின் வாழ்க்கை, வாழ்வாதாரத்தை தனது படைப்புகளின் கருப்பொருளாக்கியவர். ஐந்தாவது வரைதான் படித்தார். பள்ளிப்படிப்பை முடிக்காதவர்,
ஆனால் பாண்டிச்சேரி பல்கலைகழகத்தில் வருகைதரும் பேராசியராக (Visiting professor) பணியாற்றினார். 2018 ல் அவரது இணையர் மறைவையொட்டி விசாரிக்க அவரை சந்தித்தேன். தமிழகத்தின் முற்போக்கான மரபையும், பண்பாட்டையும் தாங்கி நின்ற மகத்தான மனிதரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.