தமிழ்நாடு

மாணவர்களுக்கு அநீதி இழைத்த தமிழக அரசு: சென்னை உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டு

webteam

மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரத்தில் சரியான முடிவை உரிய நேரத்தில் எடுக்காமல் மாநிலப்பாடத் திட்ட மாணவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த மாணவி கிருத்திகா தொடர்ந்த வழக்கில் இக்கருத்தை நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார். தேர்வு எழுதியவர்களில் 5 சதவிகிதம் பேர் மட்டுமே சி.பி.எஸ்.இ. மாணவர்கள் என்று சொன்ன நிலையில், மாணவர் சேர்க்கையில் எப்படி அவர்கள் 50 சதவிகித இடத்தை பெறுகிறார்கள் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். இன்று வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் எந்தெந்த பாடத்திட்டத்தில் படித்தவர்களில் எத்தனை மாணவர்களுக்கு இடம் கிடைக்கும் என்பதை விளக்கமாக தெரிவிக்கும்படியும் தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.

சி.பி.எஸ்.இ பாடத்திட்ட கேள்விகளை மாநில பாடதிட்ட மாணவர்கள் எப்படி எதிர்கொள்ள முடியும்? என அவர் கேள்வி எழுப்பினார். 10 ஆண்டுகளாக பாடத்திட்டத்தை மாற்றாதது ஏன்? என்றும் கற்பிக்கும் முறையை மாற்றாதது ஏன்? என்றும் நீதிபதி கிருபாகரன் தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பினார். மேலும், இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், நீட் தேர்வுக்கு வினாத்தாள் தயார் செய்யும் பணியை சிபிஎஸ்இ இடம் ஒப்படைக்காமல் ஒரு பொதுவான அமைப்பின் மூலம் செய்திருக்க வேண்டும் என்றார்.

உடுமலைப்பேட்டை மாணவி கிருத்திகா 12 ஆம் வகுப்பில் 1184 மதிப்பெண்களுடன் 199.25 கட்-ஆஃப் மதிப்பெண்ணும், நீட் தேர்வில் 154 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். இந்நிலையில் மருத்துவ கலந்தாய்வில் தன்னை அனுமதிக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.