தமிழ்நாடு

விரைவுச் செய்திகள்: வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை | பொலிவியா நாடாளுமன்றத்தில் சண்டை

Sinekadhara

தமிழ்நாட்டில் வனப்பகுதி ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்கப்பட அனுமதிக்கக்கூடாது என நீலகிரியில் வனப்பகுதி நிலம் ஆக்கிரமிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளர்வுகளை தவறாக பயன்படுத்தக் கூடாது: ஊரடங்கு தளர்வுகளை மக்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. முறையான காரணம் இல்லாமல் வெளியே வருவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி: தமிழகத்தில் ஊரடங்கு காரணமாகவே கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.

நெல்லையில் ஈபிஎஸ்-க்கு எதிராக போஸ்டர்: ஓபிஎஸ்ஸிடம் ஆலோசிக்காமால் நடந்து கொண்டதால்தான் தோல்வியை சந்தித்தோம் என எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கும் வகையில் நெல்லையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக முன்னாள் அமைச்சருடன் சசிகலா பேச்சு: ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌அதிமுக முன்னாள் அமைச்சர் ஆனந்தனுடன் சசிகலா பேசிய ஆடியோ வெளியானது. கட்சியை வழிநடத்த விரைவில் வருவேன் என சசிகலா மீண்டும் திட்டவட்டமாக கூறியது தெரியவந்துள்ளது.

புதிதாக யாரும் பொதுச்செயலாளர் ஆக முடியாது: அதிமுக பொதுச்செயலாளரை புதிதாக தேர்ந்தெடுக்க தேவை இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். ஈபிஎஸ் -ஓபிஎஸ் தலைமையை மக்கள் ஏற்றுக்கொண்டிருப்பதாக விளக்கமளித்துள்ளார்.

சிமெண்ட் விலை கிடுகிடு உயர்வு: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு மூட்டை சிமெண்ட் 370 ரூபாயில் இருந்து 520 ரூபாயாக அதிகரித்துள்ளது.

பஞ்சாயத்து அலுவலகத்தில் சிசிடிவி கோரி வழக்கு: பட்டியலின தலைவர்கள் அவமதிக்கப்படுவதை தடுக்க பஞ்சாயத்து அலுவலகங்களில் சிசிடிவி பொருத்தக்கோரி வழக்கு தொடரப்பட்டது. 4 வாரத்தில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெட்ரோல் விலை உயர்வு - போராட்ட அறிவிப்பு: பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து வரும் 11ஆம் தேதி நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

பட்டாக் கத்தியுடன் ரகளை செய்த நபர்: சென்னையில் குடிபோதையில் பட்டாக்கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதல் நடத்திய நபரை கைதுசெய்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

முன்னாள் அமைச்சரின் உதவியாளரிடம் விசாரணை: அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது துணை நடிகை அளித்த பாலியல் புகாரில் முன்னாள் உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரியிடம் சென்னையில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

கலையரசன் குழுவுக்கு கூடுதல் அவகாசம்: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகாரை விசாரிக்கும் கலையரசன் குழுவுக்கு மேலும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் 10 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க உயர்கல்வித்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை: மும்பையில் தென்மேற்கு பருவமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தண்டவாளங்கள் நீரில் மூழ்கியதால் புறநகர் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திற்குள் கடும் சண்டை: பொலிவியா நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு இடையே கடும் சண்டை ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வழியில் படுத்து உறங்கிய யானைகள்: சீனாவில் குட்டிகளுடன் யானைக் கூட்டம் சாலைக்கு வந்தது. 500 கிலோ மீட்டர் தூரம் வழியில் படுத்துறங்கிய யானைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.