Tamilisai Soundararajan pt desk
தமிழ்நாடு

“பிரித்தாளும் அரசியல் செய்வதை வாடிக்கையாக கொண்டவர்கள் திமுகவினர்” - தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்

webteam

செய்தியாளர்: சாந்த குமார்

சென்னை சோழிங்கநல்லூரில் பாஜக பிரமுகர் மகளின் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சிறுமிக்கு புடவை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்...

Tamilisai soundararajan

“தமிழர்களை மிகவும் மோசமாக விமர்சிப்பவர்கள் ஸ்டாலினும், செல்வப்பெருந்தகையும்தான்”

“ஒடிசாவில் பிரதமர் பேசும் போது, தமிழகத்தில் சாவி இருப்பதாகத்தான் சொன்னார், திருடர்கள் என்ற வார்த்தையை சொன்னது யார்? ஆக உண்மையில் தமிழர்களை மிகவும் மோசமாக விமர்சிப்பவர்கள் ஸ்டாலினும், செல்வப்பெருந்தகையும்தான்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அதிகாரம் இல்லாத ஒருவர், பின்வாசல் வழியாக... அதுவும் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு நபர் அங்கே (ஒடிசா) கோலோச்சிக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட ஒருவரை குறிப்பிட்டும், யாரோ ஒரு தனி நபரை குறிப்பிட்டும் சொன்னதை... ஒட்டுமொத்தமாக தமிழர்கள் மேல் சொன்னதாக புகுத்தி... அதை திருடர்கள் என்ற வார்த்தையை உருவகப்படுத்தி சொல்வது மிகத்தவறு!

அங்கிருக்கும் (ஒடிசாவில்) டிஜிபி போய் யாரிடம் ரிப்போர்ட் பண்ணனும் என்றால், அதுவும் அவரிடம்தான் பண்ணனும். அமைச்சர்களும் அவரைதான் போய் பார்க்கணும். இப்படிப்பட்ட சூழ்நிலை இருக்கும் போது அதை மறைமுகமாக சொன்னதை வைத்து, திருடர்கள் என்ற வார்த்தையை இவர்கள் சேர்த்துக் கொண்டார்கள். இதன்மூலம் தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

“பிரித்தாளும் அரசியல் செய்வது திமுக-வின் வாடிக்கை...”

பிரித்தாளும் அரசியல் செய்வது வாடிக்கையாகவே கொண்டவர்கள் திராவிட முன்னேற்ற கழகம். இன்றைக்கு செல்வப்பெருந்தகை பிரதமர் மோடியும், அமித்ஷா அவர்களும் மன்னிப்பு கேட்க வேண்டும் என சொல்கிறார். இல்லையென்றால் கமலாலயம் முற்றுகையிடப்படுமாம்.

இலங்கையில் அவ்வளவு தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு நீங்கள் முதலில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மத்தியில் காங்கிரசும் இங்கு திமுகவும்தான் அப்போது ஆட்சியில் இருந்தனர். எவ்வளவு பேர் அன்று இலங்கையில் கொல்லப்பட்டார்கள்?

modi

பாஜக சொன்னதை முதல்வர் சொல்லவில்லை! 

தமிழர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட நம் பாரத பிரதமர், ‘தமிழ்மொழி எனக்கு மிகவும் நெருக்கமான மொழி; காசி தமிழ்ச்சங்கம், காசி சௌராஷ்டிரா சங்கம் அதற்காகதான் நடத்தினேன்; தேர்தல் அறிக்கையில் கூட தமிழ் வளர்ச்சிக்கு நாங்கள் பாடுபடுவோம்’ என்று கூறியுள்ளார். இது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில்கூட இல்லை. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் எனது பங்கு மிகப்பெரிய என்று சொல்லும் ஸ்டாலின் கூட அதில் தமிழ் வளர்ச்சிக்காக எதுவும் சொல்லவில்லை. ஆனால் பாஜக சொல்லி இருக்கிறது.

இதையெல்லாம் மறந்து, தற்போது பிரதமர் சொல்லாத ஒன்றை உருவகப்படுத்தி, அதன் மூலம் குளிர்காய்கிறார்கள். சாம் பிட்ரோடா தென்னிந்தியர்கள் எல்லோரும் கருப்பாகதான் இருப்பார்கள் என சொன்னார்.

“உங்களுக்கு தேவை இருக்கும் போதெல்லாம்...”

தென்னிந்தியர்கள் என்றால் அதில் தமிழகத்தை சார்ந்தவர்களும் அடங்கும். ஆனால், அன்றைக்கு இளங்கோவன் ‘ஒரு நிலப்பரப்பைதான் சாம் பிரிட்டோ சொன்னார், மக்களை சொல்லவில்லை’ என்றார். ஆக உங்களுக்கு தேவை இருக்கும் போதெல்லாம், தமிழர்கள் அவமதிக்கப்பட்டால்கூட உரிமையை விட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இது மேகதாதுவாக இருக்கட்டும், சிலந்தி அணையாக இருக்கட்டும்... எல்லா உரிமையும் விட்டுக் கொடுத்து விட்டு, பாரத பிரதமர் சொன்னதை திரித்து ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது, செல்வப்பெருந்தகையை நான் கண்டிக்கிறேன், அவர்கள் சொல்லாத ஒரு வார்த்தையை திரித்து போட்டு இவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

நான் முதல்வர் ஸ்டாலினிடம் கேட்கிறேன்... ஒரு அதிகாரி, அதிகாரத்தை செய்தபின், ‘அதை ஸ்டாலின் கிட்ட ரிப்போட் பண்ண வேண்டாம், அவர் கிட்ட பண்ணா போதும்’ என வேறொருவரை காண்பித்தால், அதை தமிழக மக்கள் ஒத்துக் கொள்வார்களா? இதைதான் பிரதமரும், அமித்ஷா அவர்களும் சுட்டிக் காட்டினார்கள் ”என்றார்.