தமிழ்நாடு

உக்ரைன் ராணுவத்தில் இணைந்த கோவை இளைஞர்... பின்னணி என்ன?

நிவேதா ஜெகராஜா

கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர் உக்ரைன் ராணுவத்தில் இணைந்திருப்பது பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து இந்திய உளவுத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள சுப்பிரமணியம் பாளையத்தை சேர்ந்த சாய் நிகேஷ் என்பவர் உக்ரைனில் உள்ள தேசிய விண்வெளி அறிவியல் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். தற்போது உக்ரைனில் போர் நிலவி வரும் சூழலில், சாய் நிகேஷ் அந்நாட்டு ராணுவத்தில் சேர்ந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த இந்திய உளவுத்துறையினர் கோவையில் உள்ள அவரது வீட்டில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், அப்போது அவரது அறை முழுவதும் ராணுவ வீரர்களின் புகைப்படம் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் உயரம் குறைவாக இருந்ததால் இந்திய ராணுவத்தில் சேர முடியாமல் போனதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து உக்ரைனுக்கு படிக்க சென்ற சாய் நிகேஷ் போர் சூழலை பயன்படுத்தி அந்நாட்டு ராணுவத்தில் இணைந்து, ராணுவ வீரராகும் தமது கனவை அடைந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், மகன் குறித்த அனைத்து தகவலையும் வழங்கிய பெற்றோர், சாய் நிகேஷை மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.