தமிழ்நாடு

போராட்டக்காரர்களை ’சிங்கம்’ ஸ்டைலில் எச்சரித்த எஸ்.ஐ-க்கு பரிசு!

போராட்டக்காரர்களை ’சிங்கம்’ ஸ்டைலில் எச்சரித்த எஸ்.ஐ-க்கு பரிசு!

webteam

பேருந்தை தாக்க வந்த பாஜக-வினரை, ’சிங்கம்’ பட பாணியில் எச்சரித்த தமிழ்நாடு எஸ்.ஐ-க்கு கேரள அரசு பரிசு அறிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, கேரளாவில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் கேரளாவை சேர்ந்த 2 பெண்கள் சபரிமலை கோயிலில் சாமி தரிசனம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதைக் கண்டித்து இந்து அமைப்புகள் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தின. இதில் பல இடங்களில் வன்முறை வெடித்தன. அரசு பேருந்துகள், கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் போராட்டம் கேரள-தமிழக எல்லையான களியாக்காவிளையிலும் எதிரொலித்தது. அங்கு பாஜகவினர், கேரள அரசு பேருந்தை மறித்து போராட்டம் நடத்தினர். பின்னர் பஸ்சை தாக்க முற்பட்டனர். அப்போது அங்கு வந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மோகன் ஐயர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு கூறினார். செல்லாத அவர்கள், பஸ்சை தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவர்கள் முன் நின்ற மோகன் ஐயர், ‘’ஏல, தைரியம் இருந்தா, பஸ்சை தொட்டு பாருங்கல. (தமிழ்நாட்டு) பார்டரை தாண்டி போயி போராட்டம் நடத்தேம்ல’’ என்று கர்ஜித்தார். இதையத்து பாஜகவினர் அமைதியாகி பின் சென்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்நிலையில், கேரள அரசு போக்குவரத்து எம்.டியும் கூடுதல் காவல்துறை ஐ.ஜியுமான, டோமின் ஜே.தச்சனகரி, சப் இன்ஸ்பெக்டரை போனில் தொடர்புகொள்ள முயன்றார். இவர் போலீஸ் அதிகாரி சைலேந்திரபாபுவின் பேட்மேட். இதையடுத்து அவரை தொடர்பு கொண்டு, போன் நம்பரை வாங்கியுள்ளார். பின்னர் மோகன் ஐயருக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். அதோடு ஆயிரம் ரூபாய் பரிசு வழங்குவதாகவும் அறிவித்தார்.

‘’பஸ்சை தாக்கினால், அது பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதுவும் களியக்காவிளை பிசியான பகுதி. சிறிய இடைஞ்சல் கூட, பெரிய போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், எங்களது சின்ன டீமை வைத்துக்கொண்டு அந்த போராட்டத்தை சமாளித்தோம். இதற் காக எனக்கு கேரள, தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து அதிகமாக பாராட்டு வருகிறது’’ என்கிறார் திருநெல்வேலிக்கார இந்த சப் இன்ஸ்பெக்டர், மோகன் ஐயர்!