தமிழ்நாடு

தினமும் 15 கி.மீ அடர் காட்டில் பயணம்; 30 வருட சர்வீஸ் : தபால்காரருக்கு குவியும் பாராட்டு

தினமும் 15 கி.மீ அடர் காட்டில் பயணம்; 30 வருட சர்வீஸ் : தபால்காரருக்கு குவியும் பாராட்டு

webteam

கடந்த 30 வருடமாக கடிதங்கள் வழங்குவதற்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தபால்காரர் டி சிவன் தனது வேலையிலிருந்து ஓய்வு பெற்றார்.

நீலகிரி மாவட்டம், குன்னுார் வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவன். கடந்த, 30 ஆண்டுகளாக தபால் துறையில் பணியாற்றி வந்த நிலையில் தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவரது பணியில் சிறப்பு என்னவென்றால், நாள்தோறும் 15கி.மீ அடர்ந்த காட்டில் பயணம் செய்து மக்களுக்கு தபால்களை கொடுத்து வந்துள்ளார்.

இதுகுறித்து ஐஏஎஸ் சுப்ரியா தனது டிவிட்டர் பக்கத்தில் “குன்னூரில் அணுக முடியாத பகுதிகளில் அஞ்சல் அனுப்ப தபால்காரர் டி.சிவன் கடிமனான காடுகள் வழியாக தினமும் 15 கி.மீ. பயணித்தார். காட்டு யானைகள், கரடிகள், வழுக்கும் நீரோடைகள், நீர்வீழ்ச்சிகள் ஆகியவற்றை கடந்து கடந்த 30 வருடமாக தனது பணியை அர்பணிப்புடன் செய்த தபால்காரர் சிவன். இவர் கடந்த வாரம் ஓய்வு பெற்றுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

சிவனின் அர்ப்பணிப்பு குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சிவன் ஒரு ரியல் சூப்பர் ஹீரோ எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஐபிஎஸ் விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் சிவனின் பங்கு மிகவும் பாராட்டத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ளார்.