தமிழ்நாடு

தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு டீன்கள் நியமனம் - அரசு அறிவிப்பு

webteam

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான புதிய டீன்களை அறிவித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய டீன்களை சுகாதாரத்துறை செயலர் பீலா ரமேஷ் நியமித்து ஆணை வெளியிட்டுள்ளார். அதில் டாக்டர் முத்துக்குமரன் சென்னை அரசு மருத்துவக்கல்லூரி டீன் ஆக நியமிக்கப்பட்டிருப்பதாகவும், குந்தவை தேவி கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் ஆக நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாக்டர் அல்லி, ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு டீன் மற்றும் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்படுவதாகவும், டாக்டர் ரவிச்சந்திரன் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி டீன் ஆக மாற்றப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் டாக்டர் முத்துகிருஷ்ணன் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் அரசு ஆராய்ச்சி நிறுவனத்தின் டீன் மற்றும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவதாகவும், டாக்டர் முருகேசன் தேனி மருத்துவக் கல்லூரியின் டீன் ஆக நியமிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டாக்டர் சங்குமணி மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ஆகவும், டாக்டர் சுகந்தி தஞ்சாவூர் டீன் ஆகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டாக்டர் திருவாசகமணி திருநெல்வேலி டீன் ஆகவும், டாக்டர் பாலாஜி செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி டீன் ஆகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

டாக்டர் பாலாஜி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நடைபெற்ற இடைத்தேர்தலுக்காக, ஜெயலலிதாவின் கைரேகையை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர டாக்டர் ரவீந்திரன் நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரியின் டீன் ஆகவும் சிறப்பு அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். டாக்டர் ரத்தினவேல் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி டீன் ஆகவும், டாக்டர் நிர்மலா கோயம்பத்தூர் மருத்துவக்கல்லூரி டீன் மற்றும் சிறப்பு அதிகாரியாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.