தமிழ்நாடு

சபாநாயகர் தலைமையில் இன்று அலுவல் ஆய்வுக்கூட்டம்

webteam

தமிழக சட்டப்பேரவை வரும் 28 ஆம் தேதி கூடும் நிலையில், சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. 

தமிழக சட்டப்பேரவையில் நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பிப்ரவரி 11 ஆம் தேதியில் இருந்து 13 ஆம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடத்தப்‌பட்டு, அதன் பின்னர் தேதி குறிப்பிடப்படாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் காரணமாக, துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்தி, துறை ரீதியான நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் பெற தமிழக சட்டப்பேரவை வரும் 28ஆம் தேதி கூடுகிறது. இந்த சூழலில் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவு செய்ய அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் இன்று கூடுகிறது. அதில் எந்தெந்த தேதிகளில் எந்த துறைகளின் மானிய கோரிக்கை குறித்து விவாதிப்பது என்பன உள்ளிட்ட அம்சங்கள் குறித்து முடிவு செய்யப்படவுள்ளது. மேலும் இன்று நண்பகல் 12 மணிக்கு தமிழக சட்டபேரவை தலைவர் தனபால் தலைமையில் நடைபெறும் இந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் அவை முன்னவர், எதிர்கட்சி தலைவர், சட்டமன்ற கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர்.